Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேராசிரியரியை கடத்திய வணக்கம் சோமு: கொரோனா பீதியில் போலீஸில் திடீர் சரண்

மார்ச் 28, 2020 12:45

திருச்சி: திருச்சியில் பேராசிரியரியை மிரட்டி, விரட்டி கடத்திய அ.தி.மு.க. பிரமுகர் வணக்கம் சோமு 7 மாத தலைமறைவுக்கு பின் கொரோனா பீதியால் நேற்று கோட்டை போலீசில் சரணடைந்தார்.

திருச்சி அ.தி.மு.க. பிரமுகர் வணக்கம் சோமு. மறைந்த ஜெயலலிதா மீது ஏற்பட்ட அதீத ஈர்ப்பின் காரணமாக 2009-ல் அ.தி.மு.க.வில் இணைந்து கடுமையாக பணியாற்றினார். இவரது செயல்பாடுகளை கண்டு வியந்த தலைமை, திருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி பொருளாளர் பதவியும் கொடுத்தது. அப்போதுதான் திருச்சி மாவட்டத்தில் பிரபலமானார்.

இவர் மீது 7 மாசத்துக்கு முன் அதாவது செப்டம்பர் 30ம் தேதி ஒரு பேராசிரியரை கடத்திவிட்டார் என்ற புகார் எழுந்துள்ளது. தனியார் பெண்கள் கல்லூரியில் பணியாற்றும் அந்த ஆசிரியை பெயர் லீலாவதி (பெயர்மாற்றப்பட்டுள்ளது). மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லீலாவதி. இவர் சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியையாக பணியாற்றினார்.

சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு லீலாவதி நடந்து சென்று கொண்டிருந்தபோது ஆம்புலன்சில் காத்திருந்த நபர்கள் பேராசிரியை லீலாவதியை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. ஆம்புலன்ஸில் சென்றபோது, லீலாவதி அலறி சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அவரை துவரங்குறிச்சி என்ற இடத்தில் இறக்கி விட்டு கடத்தல்காரர்கள் பறந்தனர். 

இதன்பின்னர், லீலாவதி போலீசுக்கு புகார் சொல்லியதையடுத்து விசாரணை ஆரம்பமானது. அப்போதுதான் வணக்கம் சோமு கடத்தலில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. வணக்கம் சோமுவுக்கு பேராசிரியை மீது ஒரு தலைக்காதல் இருந்துள்ளது. 

அவர், எங்கெங்கு போகிறாரோ, அங்கெல்லாம் பின்னாடியே சென்று வணக்கம் சோமு தகராறும் செய்திருக்கிறார். பலமுறை லீலாவதி இதற்கு எதிர்ப்பு காட்டியும் அவர் தன்னை மாற்றி கொள்ளவில்லை. ஏற்கனவே கல்யாணமாகி, கல்லுாரி படிக்கிற அளவுக்கு ஒரு மகளும் வணக்கம் சோமுவுக்கு உள்ள நிலையில்தான் பேராசிரியை மீது லவ் வந்து, கடத்தல் வரை சென்றது திருச்சி அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து அ.தி.மு.க. தலைமை அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது. ஆனால், அப்போதே வணக்கம் சோமு தலைமறைவாகி விட்டார்.

அவரை கோட்டை போலீசாரும் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், 7 மாத தலைமறைவுக்கு பின் நேற்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், உயிர் பயம் காரணமாக வணக்கம் சோமு சரணடைந்ததாக கூறப்படுகிறது. சரணைடந்த வணக்கம் சோமுவிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்